search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறுவை சாகுபடி"

    • காவிரி பாசன மாவட்டங்களுக்கு தண்ணீர் பெற்றுத்தர வேண்டிய கடமையில் தமிழ்நாடு அரசு தோற்றுவிட்டது.
    • வறட்சியால் பாதிக்கப்பட்ட குறுவை பயிர்களுக்கான இழப்பீட்டை அரசு தான் வழங்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவிரி பாசன மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக வாடிய சுமார் 40,000 ஏக்கர் குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.5,400 வீதம் இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். கர்நாடகத்திடமிருந்து உரிய காவிரி நீரை பெற்றுத் தர தவறியதால் 2 லட்சம் ஏக்கரில் குறுவை பயிர்கள் கருகி வரும் நிலையில், 40,000 ஏக்கருக்கு மட்டும் இழப்பீடு வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருப் பதை கண்துடைப்பாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.

    காவிரி பாசன மாவட்டங்களில் அறுவடை செய்ய தயாராகாத 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான குறுவைப் பயிர்களை காப்பாற்ற முடியாது. அவ்வாறு இருக்கும் போது 40 ஆயிரம் ஏக்கரில் மட்டும் தான் பாதிப்பு என்று எந்த வகையில் அரசு கணக்கிட்டது என்பது தெரியவில்லை.

    அதுமட்டுமின்றி, சேதமடைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.5400 மட்டும் தான் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது உழவர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகும்.

    காவிரியில் தண்ணீர் வராததால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான பயிர்களுக்கும் ஏக்கருக்கு ரூ. 40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டிய தார்மிகக் கடமை தமிழக அரசுக்கு இரு வழிகளில் உள்ளது. முதலாவது, கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் இன்று காலை நிலவரப்படி கூட 66 டி.எம்.சி தண்ணீர் உள்ள நிலையில், அங்கிருந்து காவிரி பாசன மாவட்டங்களுக்கு தண்ணீர் பெற்றுத்தர வேண்டிய கடமையில் தமிழ்நாடு அரசு தோற்றுவிட்டது. அத்தகைய கடமை தவறுதலுக்காகவே தமிழக அரசு இழப்பீடு தர வேண்டும்.

    இரண்டாவதாக, குறுவை நெற்பயிர்களுக்கு தமிழக அரசு காப்பீடு வழங்கி யிருந்தால், தண்ணீரின்றி கருகிய பயிர்களுக்கு காப்பீடு நிறுவனங்களிடமிருந்து ஏக்கருக்கு அதிக பட்சமாக ரூ.30 ஆயிரம் இழப்பீடு கிடைத்திருக்கும். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை குறுவை நெல்லுக்கு காப்பீடு வழங்கப்பட்டு வந்தது.

    ஆனால், தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு குறுவைக்கு காப்பீடு வழங்குவது நிறுத்தப்பட்டுவிட்டது. அதுமட்டுமின்றி, குறுவை பயிர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அதை இயற்கைப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழக அரசு ஈடு செய்யும் என்று அறிவிக்கப் பட்டது. அந்த வகையில் வறட்சியால் பாதிக்கப்பட்ட குறுவை பயிர்களுக்கான இழப்பீட்டை அரசு தான் வழங்க வேண்டும்.

    பாதிக்கப்பட்ட குறுவை பயிர்களுக்கான இழப் பீட்டை வழங்கும் பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கும் நிலையில், வெறும் 40,000 ஏக்கருக்கு மட்டும் ஏக்கருக்கு ரூ.5400 மட்டும் இழப்பீடு வழங்குவது எந்த வகையில் நியாயம்? இந்த தொகை நடவு நட்ட செலவை ஈடு செய்வதற்குக் கூட போதுமானதல்ல.

    ஓர் ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய ரூ.25,000 வரை செலவு ஆவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. என்.எல்.சி நிறுவனத்தால் கடலூர் மாவட்டத்தில் நெற்பயிர்கள் அழிக்கப்பட்ட போது, அப்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.

    அவற்றைக் கருத்தில் கொண்டு, வறட்சி யால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் ஏக்கர் பரப்பளவி லான குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வழக்கத்தை விட அதிகமாக 5.10 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் குறுவை பருவ நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்டன.
    • இதுவரை சுமார் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மட்டுமே அறுவடை நடைபெற்றுள்ளது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்வதற்காக, மேட்டூர் அணையிலிருந்து தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடப்பாண்டிலும் ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டதால், வழக்கத்தை விட அதிகமாக 5.10 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் குறுவை பருவ நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்டன.

    ஆனால், தென்மேற்கு பருவமழை பொய்த்ததால், கர்நாடக அணைகளில் இருந்து எதிர்பார்த்த அளவுக்கு தண்ணீர் திறக்கப்படாததால், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே குறுவைப் பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்கவில்லை. இயற்கை கை கொடுத்தாலோ, உச்சநீதிமன்றம் நீதி வழங்கினாலோ, குறுவை பயிர்களை பெரிய அளவில் பாதிப்பின்றி காப்பாற்றி விடலாம் என்று உழவர்கள் நம்பிக்கொண்டிருந்த நிலையில் எல்லா வாய்ப்புகளும் நழுவி விட்டன; நம்பிக்கைகள் பொய்த்து விட்டன.

    காவிரி பாசன மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் குறுவை நெற்பயிர்கள் பயிரிடப்பட்டிருந்த நிலையில், இதுவரை சுமார் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மட்டுமே அறுவடை நடைபெற்றுள்ளது.

    காவிரியில் தண்ணீர் இல்லாததால் இரண்டு லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை பயிர்கள் கருகும் நிலையில், அறுவடை செய்யப்பட்ட பகுதிகளிலும் கூட தண்ணீர் பற்றாக்குறை காரணமாக போதிய விளைச்சல் கிடைக்கவில்லை. காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக ஆய்வு செய்து வரும் வேளாண்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்ட போதிலும் கூட, உறுதியாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது காவிரி பாசன மாவட்ட உழவர்களுக்கு ஏமாற்றமளித்திருக்கிறது.

    கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியில் என்.எல்.சி நிறுவனத்தால் குறுவை பயிர்கள் அழிக்கப்பட்டபோது ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. அதையே அளவுகோலாகக் கொண்டு தண்ணீர் இல்லாமல் கருகிய குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். விளைச்சல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கும், பாதிப்பின் மதிப்பை கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை போன்ற காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில், கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
    • குறுவை நெற்பயிர்களுக்கான இழப்பீடு மற்றும் நிவாரண தொகையை காலதாமதம் இல்லாமல் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் வலியுறுத்துகிறது.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி, தமிழகத்திற்கு தரவேண்டிய காவிரி நீரை, கர்நாடக அரசு முறையே கொடுக்க தவறிய காரணத்தினால் விவசாயிகள் மிகவும் மனக்கஷ்டத்திலும், பொருளாதார நஷ்டத்திலும் இருக்கிறார்கள்.

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை போன்ற காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில், கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டாலும், போதுமான தண்ணீர் கடை, மடை பகுதிகளுக்கு வந்து சேரவில்லை. இதனால் குறுவை சாகுபடி பெரும் அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகளின் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கருகிப் போயிருப்பதாக கண்ணீர் வடிக்கிறார்கள்.

    எனவே பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிர்களுக்கான இழப்பீடு மற்றும் நிவாரண தொகையை காலதாமதம் இல்லாமல் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் வலியுறுத்துகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தஞ்சை மாவட்டத்தில் இலக்கை விஞ்சி 1.6 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டன.
    • தமிழகத்திற்கு உரிய நீரை வழங்காமல் கர்நாடகா தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை பாசனத்துக்காக கடந்த ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    சரியான தேதியில் திறக்கப்பட்டதாலும், குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டதாலும் விவசாயிகள் நம்பிக்கையுடன் சாகுபடியை மேற்கொண்டனர். 5½ லட்சம் ஏக்கரில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் 5.20 லட்சம் ஏக்கரை தாண்டி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சை மாவட்டத்தில் இலக்கை விஞ்சி 1.6 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டன.

    இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது. இன்றைய நிலவரப்படி 47 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது.

    மேலும் கர்நாடகா அரசும் தமிழத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்காமல் வஞ்சித்து வருகிறது. இதனால் போதிய தண்ணீரின்றி டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் கருக தொடங்கின.

    உரிய நீரை வழங்கக்கோரி விவசாயிகள் பலகட்ட போராட்டங்களை நடத்தியும் பலன் இல்லை. தமிழ்நாடு அரசும் அழுத்தம் கொடுத்தும் கர்நாடகா அரசு தண்ணீர் வழங்க மறுத்து வருகிறது.

    காவிரியில் இருந்து உரியநீரை வழங்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தது. அந்த வழக்கு வருகிற 21-ந் தேதி புதிய அமர்வில் விசாரணைக்கு வருகிறது.

    இப்படி விவசாயிகள் போராட்டம் வழியாகவும், தமிழ்நாடு அரசு சட்ட ரீதியாகவும் உரிய நீரை பெற போராடி வருகிறது.

    இந்த சூழ்நிலையில் போதிய தண்ணீரின்றி பாதிக்கப்பட்ட குறுவை பயிர்களின் நிலைகள் குறித்து நேற்று தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்பட டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் உத்தரவுப்படி வேளாண் அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்தனர். அப்போது விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை ஆய்வு அறிக்கையாக தயார் செய்தனர்.

    இன்று சென்னையில் குறுவை சாகுபடி பாதிப்பு, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்த வேளாண் அதிகாரிகள் விவசாயிகளின் கோரிக்கைகள் அடங்கிய அறிக்கைகளை சமர்பிக்கின்றனர்.

    இந்த கூட்டத்தின் முடிவில் குறுவை சாகுபடி பாதிப்புக்கு வழங்க வேண்டிய நிவாரணம் குறித்து அறிவிப்பு வெளியாகுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

    இந்நிலையில் டெல்டாவில் பாதிக்கப்பட்ட குறுவை பயிர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்தும், அடுத்து சம்பா சாகுபடியை உறுதியாக தொடங்கலாமா என்பது குறித்தும் விவசாயிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அதன் பற்றிய விவரம் வருமாறு:-

    விவசாய தொழிலாளர் சங்க துணை தலைவர் ஜீவக்குமார்:

    தமிழகத்திற்கு உரிய நீரை வழங்காமல் கர்நாடகா தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் இலக்கை மிஞ்சி சாகுபடி செய்யப்பட்டாலும் தண்ணீரின்றி பெரும் அளவில் பயிர்கள் பாதிப்புகுள்ளாகின. டெல்டா மாவட்டம் முழுவதும் இதே நிலை தான்.

    ஏற்கனவே ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்கான தண்ணீரை மிக மிக குறைந்த அளவே வழங்கியது. இவ்வளவுக்கும் கோர்ட் உத்தரவிட்டும் அதனை கண்டு கொள்ளவில்லை. இதனால் உரிய நீரின்றி டெல்டாவில் குறுவை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    இதே நிலை நீடித்தால் பயிர்களின் பாதிப்பு அதிகமாவதோடு நிலத்தடி நீர் மட்டமும் கணிசமாக குறையும் அபாயம் உள்ளது. இன்னும் சில நாட்களில் தண்ணீர் வரத்து முற்றிலும் குறையும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி இருந்தால் பயிர்கள் முற்றிலும் கருகி விடும். கடன் வாங்கி சாகுபடி செய்த பயிர்கள் வீணாகி வருகிறதே என ஒவ்வொரு விவசாயிகளும் கவலையில் உள்ளனர்.

    எனவே இன்று சென்னையில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் டெல்டாவில் பாதிக்கப்பட்ட குறுவை பயிர்களுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும். அடுத்து சம்பா சாகுபடியை தொடங்கலாமா? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். மேலும் சம்பா சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும்.

    தற்போது எஞ்சிய பயிர்களை காப்பாற்றவதற்காக நீர் கிடைக்குமா என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர். 

    • தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் 3.50 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
    • தஞ்சை மாவட்டத்தில் கல்லணை மற்றும் கல்லணைக்கால்வாய் புனரமைப்பு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார்

    தஞ்சாவூர்:

    காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை பாசன சாகுபடிக்காக கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. அதன்படி தண்ணீர் கல்லணையை வந்தடைந்ததும் அங்கிருந்து 16-ந் தேதி டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக காவிரி, வெண்ணாறு கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதையடுத்து தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் 3.50 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இலக்குகளை மிஞ்சி சாகுபடி பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பல இடங்களில் பயிர்கள் கருகி வருகின்றன. இந்தநிலையில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் தடையின்றி வழங்குவது தொடர்பாக திருச்சி மண்டல தலைமை பொறியாளர் சுப்பிரமணியன் நேற்று தஞ்சை மாவட்டத்தில் கல்லணை மற்றும் கல்லணைக்கால்வாய் புனரமைப்பு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார்.

    அப்போது அவர், தஞ்சை, பூதலூர் மற்றும் ஒரத்தநாடு வட்டங்களில் கல்லணை கால்வாய் புனரமைப்பு பணி முடிவடைந்துள்ளது.குறுவை சாகுபடிக்கு தடையின்றி தண்ணீர் வழங்க வேண்டும் என நீர்வளத்துறை பொறியாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். ஆய்வின்போது கல்லணை கால்வாய் கோட்ட செயற்பொறியாளர் பவளக்கண்ணன், உதவி செயற்பொறியாளர்கள் சீனிவாசன், இளங்கண்ணன், உதவி பொறியாளர்கள் சேந்தன், சூரிய பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • பூதலூர் வட்டார பகுதிகளில் குறுவை சாகுபடி பணிகள் 9 ஆயிரம் ஏக்கர் பரப்பில் முடிவடைந்து உள்ளது.
    • பருவம் தப்பிய கடும் வெயில் காரணமாக விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

    பூதலூர்:

    பூதலூர் வட்டார பகுதியில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஆடி மாதத்தில் கடுமையான வெயில் அடித்து வருகிறது.

    வெயிலுடன் அவ்வப்போது கடுமையான காற்றும் வீசுகிறது.

    பூதலூர் வட்டார பகுதிகளில் குறுவை சாகுபடி பணிகள் 9 ஆயிரம் ஏக்கர் பரப்பில் முடிவடைந்து உள்ளது.

    இந்த வாரத்தில் குறுவை சாகுபடி முழுமையாக முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.

    தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை பயிரில் ஆடிப் பருவத்தில் வீசும் காற்று, பருவம் தப்பிய கடும் வெயில் காரணமாக புது விதமான பூச்சி தாக்குதல் ஏற்படக்கூடும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

    வேளாண்துறையினர் குறுவை சாகுபடி வயல்கள் உன்னிப்பாக கவனித்து விவசாயிகளுக்கு உரிய அறிவுரை வழங்கி நல்ல நிலையில் குறுவை பயிர்களை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர் பார்க்கின்றனர்.

    • விவசாயிகள் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற் கொண்டுள்ளனர்.
    • தண்ணீர் இல்லாததால் மேற்கொண்டு செலவு செய்தாலும் நெற்பயிர்கள் வளர்ந்து பலன் கொடுக்குமா என தெரியவில்லை

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்த மணலி ஊராட்சியில் பரப்பாகரம் கிராமம் உள்ளது. இந்த கிராமமானது அரிச்சந்திரா ஆற்றில் இருந்து பிரியும் ராசன் வாய்க்கால் மூலம் பாசனம் பெறக்கூடிய கிராமமாகும்.

    இந்நிலையில், இங்குள்ள விவசாயிகள் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற் கொண்டுள்ளனர்.

    மேட்டூர் அணை கடந்த மாதம் (ஜூன்) 12-ந் தேதி திறக்கப்பட்டது. அதன் பின்னர் அரிச்சந்திரா ஆற்றில் ஒருமுறை தான் தண்ணீர் வந்தது. தொடர்ச்சியாக தண்ணீர் வராததால் ராசன் வாய்க்காலிலும் தண்ணீர் குறைந்தளவே இருந்தது.

    இந்நிலையில், நேரடி தெளிப்பு மூலம் பயிரிடப்பட்ட குறுவை நெற்பயிர்கள் முளைத்து தண்ணீரின்றி கருகத் தொடங்கின. இதனால் சாகுபடி செய்த விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்தனர்.

    இந்நிலையில், செல்வம் என்கிற விவசாயி தனக்கு சொந்தமான 2 ஏக்கர் பரப்பளவில் ரூ.10 ஆயிரம் செலவு செய்து குறுவை சாகுபடி மேற்கொண்டுள்ளார். தற்போது தண்ணீர் இல்லாததால் மேற்கொண்டு செலவு செய்தாலும் நெற்பயிர்கள் வளர்ந்து பலன் கொடுக்குமா என தெரியவில்லை என கருதி சாகுபடி செய்யப்பட்ட வயலில், டிராக்டரை கொண்டு உழவு செய்து முளைத்து தண்ணீரின்றி கருகிய நெற்பயிர்களை அழித்தார்.

    எனவே, அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • குறுவை தொகுப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் வழங்கப்பட்டது.
    • 43 கிராமங்களில் 6 ஆயிரத்து 500 ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டது.

    நாகப்பட்டினம்,

    நாகப்பட்டினம் கீழ்வேளூரில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) தேவேந்திரன் தலைமை தாங்கினார்.

    வட்டார ஆத்மா குழு தலைவர் கோவிந்தராசன் முன்னிலை வகித்தார். கீழ்வேளூர் வட்டார அளவில் 43 கிராமங்களில் 6 ஆயிரத்து 500 ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் 100 சதவீத மானியத்தில் 20 விவசாயிகளுக்கு யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ் உரங்கள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் கீழ்வேளூர் வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) ராஜலட்சுமி, ஒன்றியக்குழு தலைவர் வாசுகி நாகராஜன், துணைத்தலைவர் புருஷோத்தமதாஸ், பேரூராட்சி மன்ற தலைவர் இந்திராகாந்தி, துணைத் தலைவர் சந்திரசேகரன், ஆத்மாகுழு உறுப்பினர்கள் பழனியப்பன், அட்சயலிங்கம், துணை வேளாண்மை அலுவலர் பிரான்சிஸ், உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • காவிரி நீரை நம்பியிருக்கும் ஒகேனக்கல் அருவியில் தற்போது நீர்வரத்து குறையத் தொடங்கியுள்ளது.
    • கர்நாடகாவின் போக்கை கடுமையாக கண்டித்து, தமிழக உரிமையை நிலைநாட்ட தமிழக அரசு போராடி இருக்க வேண்டும்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசு, கர்நாடக அரசிடம் பெற வேண்டிய காவிரி நீர் விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுத்து, தமிழக விவசாயிகளின் குறுவை சாகுபடிக்கு உதவிட வேண்டும். காவிரி நீரை நம்பியிருக்கும் ஒகேனக்கல் அருவியில் தற்போது நீர்வரத்து குறையத் தொடங்கியுள்ளது.

    இதனால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். கர்நாடக துணை முதல்-மந்திரி, முதல்-மந்திரி ஆகியோர் காவிரி நீர் விவகாரத்தில், மேகதாது அணைப் பிரச்சினையில், தமிழகத்துக்கு எதிரான போக்கை கடைபிடிக்கின்ற வேளையில் தமிழக தி.மு.க உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் செயல்பாடுகள் யார் பக்கம். கர்நாடக காங்கிரஸ் பக்கமா அல்லது தமிழக விவசாயிகள் பக்கமா.

    அதாவது கர்நாடகாவின் போக்கை கடுமையாக கண்டித்து, தமிழக உரிமையை நிலைநாட்ட தமிழக அரசு போராடி இருக்க வேண்டும். எனவே காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகாவின் அத்துமீறிய பேச்சை, செயலை கண்டித்து, ஜூன், ஜூலை மாதத்துக்கான தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசை தமிழக அரசு வற்புறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • குறுவை சாகுபடி செய்ய முடியாத சூழலும் ஏற்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
    • கர்நாடக அரசு ஜூன், ஜூலை மாதத்துக்கு மட்டும் தமிழகத்துக்கு சுமார் 41 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால், திறக்கப்படும் தண்ணீரின் அளவு 12 டி.எம்.சி ஆக குறைந்துள்ளதால், நாத்து நடும் விவசாயிகள் நடவு செய்யாமல் விட்டு விடலாமா என்ற கவலையில் உள்ளனர். மேலும் குறுவை சாகுபடி செய்ய முடியாத சூழலும் ஏற்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

    கர்நாடக அரசு ஜூன், ஜூலை மாதத்துக்கு மட்டும் தமிழகத்துக்கு சுமார் 41 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும். அப்படி திறந்தால் தான் விவசாயிகள் தொடர்ந்து நடவு செய்து, குறுவை சாகுபடியை மேற்கொள்ள முடியும். எனவே தமிழக அரசு, கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு பெற வேண்டிய ஜூன், ஜூலை மாதத்துக்கான காவிரி நீரை முழுமையாகப் பெற உடனடி நடவடிக்கையை மேற்கொண்டு, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் கரூர் மாவட்டம் மாயனூர் கடந்து நேற்று முக்கொம்பை அடைந்தது.
    • கல்லணைக்கு வந்த தண்ணீரை பிரித்து வழங்குவதற்காக ஏற்கனவே கல்லணையில் உள்ள தலைப்பு பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை, திருவாரூர் நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர் உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    இதற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். இந்த ஆண்டு குறிப்பிட்ட தேதியான கடந்த 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் கரூர் மாவட்டம் மாயனூர் கடந்து நேற்று முக்கொம்பை அடைந்தது. அங்கிருந்து தஞ்சாவூர் மாவட்டம் கல்லணைக்கு காவிரி நீர் நள்ளிரவில் வந்தடைந்தது. இதையடுத்து இன்று காலை கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு விழா நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு கல்லணையில் உள்ள ஆதிவிநாயகர், ஆஞ்சநேயர், கருப்பண்ண சுவாமி கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

    கல்லணைக்கு வந்த தண்ணீரை பிரித்து வழங்குவதற்காக ஏற்கனவே கல்லணையில் உள்ள தலைப்பு பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது.

    தொடர்ந்து நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே. என். நேரு, பொத்தானை அமுக்கி தண்ணீர் திறந்து விட்டார். பின்னர் நவதானியங்கள் மற்றும் மலர்களை தூவப்பட்டன. இதேப்போல் விவசாயிகள் காவிரி ஆற்றை வணங்கி மலர்களையும், நவதானியங்களையும் தண்ணீரில் தூவி, விவசாயம் செழிக்க வேண்டிக் கொண்டனர்.

    இதனை தொடர்ந்து மதகுகளில் தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது. கல்லணை மூலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் 3.42 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெறும்.

    இன்று காவிரி, வெண்ணாறு, கொள்ளிடத்தில் தலா 500 கன அடி தண்ணீரும், கல்லணை கால்வாயில் 100 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது .

    நீர் வரத்துக்கு ஏற்றவாறு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படும். இந்த தண்ணீர் கடைமடைப் பகுதிக்கு 10 நாட்களில் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கல்லணை திறப்பை முன்னிட்டு கல்லணையில் உள்ள அகத்தியர் சிலை, காவிரி அன்னை சிலை, சர் ஆர்தர் காட்டன் சிலை, கரிகால சோழன் சிலை ஆகிய சிலைகளுக்கு வர்ணம் பூசி புதுப்பொலிவுடன் காணப்பட்டது. இந்த சிலைகளுக்கு அதிகாரிகள் மாலைகள் அணிவித்து மரியாதை செய்தனர்.

    கல்லணை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலெக்டர்கள் தீபக்ஜேக்கப் ( தஞ்சாவூர் ), பிரதீப்குமார் (திருச்சி), ஜானிடாம் வர்கீஸ் (நாகை) , மகாபாரதி (மயிலாடுதுறை), சாருஸ்ரீ (திருவாரூர்) , அருண்தம்புராஜ் (கடலூர்), எம்.பி.க்கள் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், கல்யாணசுந்தரம், ராமலிங்கம், துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ, தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் , மற்றும் பொதுப்பணித்துறை ,நீர்வளத்துறை அதிகாரிகள், வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் , விவசாயிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • மாயனூரில் இருந்து 55 கி.மீ. தொலைவில் உள்ள திருச்சி முக்கொம்பை நோக்கி வந்தது.
    • மேட்டூர் அணையில் இருந்து 90 நாட்கள் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.

    திருச்சி:

    காவிரி டெல்டா சாகுபடிக்காக கடந்த 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவிட்டார்.

    முன்னதாக திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் ரூ.90 கோடி மதிப்பீட்டில் நடைபெற்ற பாசன வாய்க் கால்கள் தூர்வாரும் பணியை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடைமடை வரை தங்கு தடையின்றி தண்ணீர் செல்ல ஏற்பாடு செய்யுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இதற்கிடையே மேட்டூர் அணையில் இருந்த படிப்படியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு தற்போது 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இந்த தண்ணீர் சேலம் மாவட்டத்தை கடந்து நாமக்கல், ஈரோடு, ஜேடர்பாளையம், நொய்யல், கரூர், வழியாக நேற்று மதியம் கரூர் மாயனூர் கதவணையை வந்தடைந்தது. அப்போது 7 ஆயிரத்து 700 கனஅடி தண்ணீர் வந்தது. அந்த தண்ணீர் அப்படியே முழுவதுமாக முக்கொம்புக்கு திறந்துவிடப்பட்டது.

    அங்குள்ள பாசன வாய்க்கால்களான கட்டளை மேட்டு வாய்க்கால், புதிய கட்டளை வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பு குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்வதாக தெரிவிக்கப்பட்டது.

    பின்னர் மாயனூரில் இருந்து 55 கி.மீ. தொலைவில் உள்ள திருச்சி முக்கொம்பை நோக்கி வந்தது. மாலையில் பெட்டவாய்த்தலைக்கு வந்து அங்கிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முக் கொம்புக்கு நேற்று இரவு சரியாக 8.30 மணியளவில் வந்தடைந்தது.

    அதன்பிறகு முக்கொம்பில் இருந்து அந்த தண்ணீர் முழுவதும் காவிரி ஆற்றில் தண்ணீரை திறந்து விடப்பட்டது. முன்னதாக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து திறக்கப்பட்ட தண்ணீரில் அதிகாரிகள், விவசாய சங்கத்தினர் பூக்களை தூவினர்.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி முக்கொம்பு அணைக்கு விநாடிக்கு 1,900 கனஅடி நீர் மட்டுமே வந்தது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், தற்போதைய நிலையில் முக்கொம்புக்கு 1,900 கனஅடி நீர் வருகிறது. ஒவ்வொரு மணி நேரமும் நீர்வரத்து மாறுபடும். அடுத்த சில நாட்களில் மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் முழுவதுமாக நமக்கு வந்தடையும். தற்போது திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் கல்லணையை இன்று மதியம் சென்றடையும் என்றார். அங்கிருந்து நாளை அமைச்சர்கள் பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைக்கிறார்கள்.

    கல்லணையில் திறக்கப்படும் தண்ணீர் தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைமடை வரை சென்று சேரும். மேட்டூர் அணையில் இருந்து தற்போது திறந்து விடப்படும் தண்ணீரை பயன்படுத்தி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி, கடலூர், புதுக் கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், உள்ளிட்ட 12 மாவட்டங்களில் சாகுபடி நடைபெற உள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து 90 நாட்கள் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. இதன் மூலம் 17 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். 

    ×